ஞாயிறு, 1 நவம்பர், 2015

வருடாந்தம் 2500 உயிர்களை பலி கொள்ளும் வீதிவிபத்துகள்


டெங்கு வியாதியை விட மக்களின் உயிரை அதிகம் குடிக்கும் கொடிய அரக்கன் 


வீதி விபத்துக்கள் தொடர்பாக சுகாதார கல்விப் பணியகம் 20-10-2015 அன்று நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான இணைப் பேராசிரியர் சமத் டி தர்மரட்ன, வீதி போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரட்ன ஆகியோர் தெரிவித்த கருத்துகளையும், வேகமாக அதிகரித்துவரும் வாகன விபத்துகள் பற்றி ஆராய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் இடைக்கால அறிக்கையில் திரட்டிய தகவல்களையும் ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் ஒன்றாக வீதி விபத்துக்களும் விளங்கு கின்றது. வீதிகளில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் அனைத்துமே வீதி விபத்துக்களாக அடையாளப்படுத்தப் படுகின்றன.

அந்த வகையில் இன்று வீதி விபத்துக்கள் இடம்பெறாத மணித்தி யாலமே இல்லை என்றளவுக்கு நிலைமை வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இந்த வீதி விபத்துக்களால் மரணங்கள் மாத்தி ரமல்லாமல் உடல்இ உள உபாதைகளும் ஏற்படவே செய்கின்றன. மேலும் வாகன விபத்துக்களால் ஏற்படும் சேதங் களையும் மறந்து விடமுடியாது.

இவ்வாறு பல்வேறு பாதிப்புக்களையும் தரக் கூடியதாக விளங்கும் இவ்வாகன விபத்து முதன் முதலில் 1769ம் ஆண்டில்தான் இடம்பெற்றது. இதுவே உலகில் இடம்பெற்ற முதலாவது வீதி விபத்தாகப் பதிவாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக அதிகரித்து வந்த வீதி விபத்து ஒரு தொற்றா நோய் என்றளவுக்கு வளர்ச்சி அடைந்து அது ஒரு பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது.

இவ்வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு பல காரணிகள் துணை புரிந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் வாக னங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அபரிமித அதிகரிப்பு பிரதானமானது.

அத்தோடு சாரதிகள் மத்தியில் காணப்படும் முன் அவதானமற்றதும், விவேகமற்றதுமான அசமந்தப் போக்கு பாதசாரிகள் உள்ளிட்ட பொது மக்கள் மத்தியில் வீதிப் பாவனை தொடர்பாகக் காணப்படும் போதிய அறிவின்மை என்பனவும் முக்கிய கார ணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றின் விளைவாகத் தான் வீதி விபத்துகளைத் தவிர்ப்பதற்கும் பலவிதமான வேலைத் திட்டங்களும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டும் கூட அவை குறிப்பிட்டுக்கூறக் கூடியளவுக்குக் குறைவதாக இல்லை.

ஆனால் வீதி விபத்துகளையும் அதனூடாக ஏற்படும் மரணங்கள், காயங்கள் உடல், உள உபாதைகள் உட்பட சேதங்களையும் கூட முழு மையாகவே தவிர்த்து கொள்ளலாம். இல்லாவிட்டால் குறிப்பிடத்தக்களவாவது குறைத்துக் கொள்ள முடியும். அதற்கான வழிகள் இருக்கின்றன.

அதாவது சாரதிகள்இ பாதசாரிகள் உட்பட பொது மக்கள் மத்தியில் வீதி போக்குவரத்து, வீதி, பயன்பாடு மற்றும் வாகனப் பாவனை தொடர்பான விடயங்களில் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் ஏற்பட வேண்டும். இது மிக மிக இன்றியமையாதது.

இதற்கு அண்மைக் காலமாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நல்ல உதாரணமாகும். அந்நாடுகள் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களும் நடவடிக்கைகளுமே இதற்கு பின்புலமாக உள்ளன.

அவற்றை வளர்ந்துவரும் நாடுகளும் முன்னு தாரணமாகக் கொள்ள முடியும். அதனூடாக வீதி விபத் துகளை குறை க்கலாம்.

இருந்தும் கூட இப்போது வருடா வருடம் 12 இலட்சம் பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இவர்களில் 02 இலட்சத்து 70 ஆயிரம் பேர் பாதசாரிகளாவர். ஆனால் வருடமொன்றுக்கு 50 மில்லியன் பேர் வாகன விபத்துக்களால் காய மடைகின்றனர். இக்காயங்களில் மிகப் பாரதூரமான காயங்கள் குறிப்பிடத் தக்களவில் இடம்பெறுகின்றன.

இவ்வாறான காயங்களுக்கு உள்ளாகின்றவர்கள் பெரும்பாலும் உடல் உள உபாதைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்ப்பது சிரமமானது. குறிப்பாக இவ்வாறான விபத்து காயங்களுக்கு உள்ளாகின்றவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாகவும், பெளதீக ரீதியாகவும் அடுத்தவரில் தங்கி இருக்க வேண்டிய நிலைக்கே உள்ளாகின்றனர்.

அதேநேரம் வீதிவிபத்துக்களுக்கு உள்ளாகின்றவர்களில் பெரும் பகுதியினர் வளமான வயது மட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அதாவது 20-45 வயதுக்கு இடைப் பட்டவர்கள். இவ்வாறு மட்டத்தைச் சேர்ந்தவர்கள் விபத்துகள் மூலம் உயிரிழப்பதும், உடல், உள ஊனங்களுக்கு உள்ளாவதும் சமூக, பொருளாதார ரீதியில் பலவிதப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாகும். குறிப்பாக அவர்கள் வறுமை நிலைமைக்குள் தள்ளப்படுவர்.

மேலும் வீதி விபத்துக்களுக்கு உள்ளாகின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும்இசேதமடையும் சொத்துக்களை சீரமைக்கவுமென கோடிக்கணக்கான ரூபாய்களை உலகம் செலவிடுகின்றது. இது உலகம் தற்போது எதிர்கொள்கின்ற முக்கிய பொருளாதார இழப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இவ்வாறு பலவிதமான பாதிப்புக்களை தரக் கூடிய இவ்வீதிவிபத்து உலகில் அதிகளவில்இடம்பெறும் நாடாக இந்தியா காணப்படுகின்றது. அதே நேரம் இப்பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் அதிக வாகன விபத்து இடம்பெறும் நாடாக இலங்கை விளங்குகின்றது.

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 150 வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவ் விபத்துக்களால் தினமும் 5,6 பேர் உயிரிழக்கின்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடை கின்றனர் இவ்விபத்துகளவில் நேரும் மரணங்களில் நான்கில் மூன்று பங்கு மரணங்கள் 21-45 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். மேலும் இவ்விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கவென இந்நாடு வருடமொன்றுக்கு 150 மில்லியன் ரூபாவை செல விடுகின்றது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள தகவலின்படி, வீதி விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கவென பத்து இலட்சம் ரூபா முதல் ஒரு கோடி ரூபா வரை செலவிடப்படுகின்றது.

அதேநேரம் ஒவ்வொரு நாளும் சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களில் 25 வீதமானோர் வீதி விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களாவர் என்றும் இவர்களில் 70 வீதத்தினர் 15- 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் கொழும்பு தேசிய வைத்திய சாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டிருக் கின்றார்.

வீதிப் போக்குவரத்து பொலிஸ் திணைக்களப் பதிவுகளின்படி 1977ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையான 35 வருட காலப் பகுதியில் இந் நாட்டில்பதினொரு இலட்சத்து இரு பதினாயிரத்து 848 (11,20,848) விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவ்விபத்துக்களால் 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 3 இலட்சத்து 70 ஆயிரம் பேர் காயமடைந் துள்ளனர்.

இவர்களில் 68,440 பேர் மிகப்பாரதூரமான காயங்களுக்கு உள்ளானவர்களாவர். மேலும் வீதிப்போக்குவரத்து பொலிஸ் திணைக்களத்தின் பதிவுகளின்படி பார்த்தால் வருடமொன்றுக்கு இந்நாட்டில் வீதி விபத்துக்களால் 2000-2500 இடைப்பட்டோர் உயிரிழப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான உயிரிழப்புக்கள் இந்நாட்டில் காணப்படும் டெங்கு போன்ற நோய்களால் கூட ஏற்படுவதில்லை. இது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

இலங்கை ஒருவளர்முக நாடாக இருந்தும் கூட வீதி விபத்துக்களும் அதனூடான மரணங்களும், காயங்களும் அதிகரித்திருப்பதற்கு வாகனங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அபரிமித அதிகரிப்பு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்றது.

இந்நாடு சுதந்திரமடையும் போது, அதாவது 1948ம் ஆண்டில் 30 ஆயிரத்து 802 வாகனங்கள்தான் இந்நாட்டில் காணப்பட்டது. அது இன்று 2015ம் ஆண்டின் நடுப்பகுதியாகும் போது 60 இலட்சம் வாகனங்கள் வரை அதிகரித்துக்காணப்படுகின்றது. இவற்றில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் வீதிக்கு வருகின்றன.

அதே நேரம் இந்நாடு சுதந்திரமடையும் போது 11 ஆயிரம் கிலோ மீற்றர்கள் நீளமான நெடுஞ்சாலைகள்தான் காணப்பட்டது. ஆனால் இப்போது 92 ஆயிரத்து 700 கிலோ மீற்றர்கள் நீளமான வீதிகள் உள்ளன, இவற்றில் 12019 கிலோ மீற்றர்கள் நீளமான மற்றும் பி. தர வீதிகளும், 16,50 கிலொ மீற்றர்கள் நீளமான மாகாண வீதிகளும் 64,600 கிலோ மீற்றர்கள் நீளமான கிராமிய வீதிகளும் காணப்படுகின்றன.

இவற்றுக்கு மேலதிகமாக சுமார் 200 கிலோ மீற்றர்கள் நீளமான அதிவேக நெடுஞ்சாலைகளும் உள்ளன. என்றாலும் இலங்கையில் காணப்படும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீதி வலையமைப்பு போதியதாக இல்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சு ஏற்பகனவே குறிப்பிட்டிருக் கின்றது.

ஆகவே அதிகரித்துள்ள வாகனங்களின் எண்ணிக்கைக்கும் அதற்கு ஏற்ப அதிகரிக்காத வீதி வலையமைப்புக்கும் மத்தியில் வீதிகனையும் , வாகனங்களையும் பொறுப்புணர்வுடனும், முன் அவதானத் துடனும் பயன்படுத்த வேண்டியது சாரதிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பொறுப்பு. அதற்கு ஏற்ப விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசிய மானது.

நன்றி : தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக