ஞாயிறு, 11 மே, 2014

மலையகமும் நாட்டார் பாடலும்


அடக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வீரம் என்பது வறுமையில் அடிபட்டுப் போன வரலாற்றில் நம் சமூகத்தின் விதியும் எழுதப்பட்டதெனவே எண்ணினாலும்
நமக்கு நம் எண்ணங்களையும் துக்கங்களையும் ;ஊடகம்; எனும் தற்போதைய இலத்திரனியல் உலகத்திற்கு முன்னால் எல்லாம் இருந்தது இந்த நாட்டுப்புறப்பாடல்கள் தானே!

கரகாட்டம்,கும்மி,மயிலாட்டம்,கோலாட்டம்,ஒயிலாட்டம்,காவடியாட்டம்,பொய்க்கால் குதிரை ஆட்டம்,கைச்சிலம்பாட்டம்,சிலம்பாட்டம்,சக்கை ஆட்டம்,கழைக் கூத்து, தப்பாட்டம்.பொம்மி ஆட்டம் அல்லது பாவைக்கூத்து, பாகவத நடனம்,தெருக்கூத்து, தேவராட்டம், பாம்பாட்டம்,உருமி ஆட்டம். ஒட்டன் கூத்து. காமண் அல்லது காமன் பண்டிகை அல்லது காமன் கூத்து, புலியாட்டம், களியாட்டம்.சேவை ஆட்டம், வில்லுப்பாட்டு என தமிழர் வாழ்வோடு வந்த கலைகளில் நம் நாட்டர் பாடல்களும் தலை நிமிர்ந்தே வாழ்ந்தது எனலாம்.

நாட்டுப்புறப் பாடல்களை நாடோடிப் பாடல்கள் எனவும் பண்ணத்தி என்றும் பல வகைகளில் அழைக்கப்பட்டாலும் ஆய்வுகளில் இவை தனிப்பட்ட அந்தஸ்தை தாமே கொடுத்துவிட்டதாக எண்ணினாலும் தொல்காப்பியம் நாட்டுப் புறப் பாடல்களை இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே கணித்துவந்துள்ளதாகவும் கூறுவாரும் உள்ளனர்.

பல சமயங்களில் இந்த நாட்டார் பாடல்கள் ஒடுக்கப்பட்ட ஏன் அடிமைப்படுத்தப்பட்ட கூலிகளாக வாழ்ந்த சமூகத்தின் எழுச்சிப் பாடல்களாகவும் மலர்ந்து வந்துள்ளமை சிறப்பானதாக இருக்கின்றது. அவர்களின் வலின் குரலாகவும், கலகக் குரலாகவும், சமூதாயத்தின் மீது திணிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை உடைக்கும் குரலாகவும், மக்கள் குரலாகவும் ஒலித்து வந்திருப்பதைக் காணலாம்.

உதாரணமா நாம் நம் பரம்பரையில் குழந்தை அழும்போது செல்லமாக பாடும் தாலாட்டு வரிகளிலேயே இந்த அடக்கு முறை தெளிவாகத் தெரிகின்றது.

அத்த அடிச்சாரோ அரளிப்பு தண்ணடாலே
மாமன் அடிச்சானோ மல்லியப்புச் செண்டாலே

என்பது பொதுவான நாட்டார் பாடல். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு குழந்தைகள் அழுகின்றன. ஆனால் ஒன்று நம் அடிமைச் சமூகத்தின் குரல். மற்றையது வர்க்க உரிமைகளை ஆளும் சந்ததியினருடையது. தாசிமாருடைய குரலாய் இங்கு ஒலிக்கும் இந்த தாலாட்டுப் பாடல்கள் அவர்களின் வாழ்க்கைப் போராட்டமாக அமைவது தான் உண்மை...

முருங்க மரம் வெட்டி
முனி மரத்தில தொட்டிகட்டி
மொதலாளி பெத்த கண்ணே
ஆட்டுங்கம்மா தாசிமாரே
பாழும் அடுப்பிலே தான்
பாலகனும் தொட்யில – நான்
பால ஆத்துவனா
பாலகன அமத்துவனா
என்கிற இந்த பாடலின் நியாயமும் ஒரு கண்ணீர்காவியமாகவே இருப்பதை எவறாலும் மறுக்க முடியுமா?.

பொழுது போக்காக நம்மில் பலர் விளையாட்டுக்களை விளையாடுவது உண்டு. சிலரோ உடற்பயிற்சிக்காக விளையாடுவது உண்டு. பலர் பாரம்பரியங்;களுக்காக விளையாடுவது உண்டு. இன்றும் கூட திருமண வீடுகளில் சம்பிரதாயங்களுக்காக பல்லாங்குழி, விளையாட்டை விளையாடுவதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

இப்படியான விளையாட்டுக்களை விளையாடும்போது மகிழ்ச்சிகரமான சூழலை உருவாக்க அக் காலத்தில் நாட்டார் பாடல்களைப் பாடி விளையாடும் அழகு சிறப்பானது. தற்போது கிரிக்கெற் விளையாட்டில் நவீனத்துவமாக 'றம்பெட்' இசையை நாமெல்லாம் கேட்டு ஆனந்தப்படவில்லையா? அதுபோலத்தான் அந்தக்காலத்தில் இந்தப் பாடல்கள் வரவேற்புப் பெற்றன.

நாட்டுப்புறப் பாடல்கள் பலவிதமான சுசைவள்மிக்கவை. அவை வரம்பில்லாதவை. ஏன் நாக்கில்லை என்றுகூடச் சொல்லலாம். காதலின்பம் மேலீட்டை மட்டும் இந்தப் பாடல்கள் தரவில்லை. மாறாக களவியின்பத்தின் ;கள்ளக் காதலையும்; தந்தே போயிருக்கின்றன.

சில உணர்வுகள் மனித ஜீவராசிகளின் உண்மையான உணர்வுகளுடன் பேசக் கூடியவை. ஆனால், சில பால்கள் இப்படியும் எழுந்திருப்பதைப் பார்க்கும் போது அது கொஞ்சம் விரசமாக இருந்தாலும் தமிழர் தம் வாழ்வியலில் ஒன்றான உண்மைதான் என்பதற்கு மறுப்பதற்கில்லை.

இங்கு பாருங்கள். ஒரு கள்ளக் காதலின் வரிகளை. ஆன்மீகக் காதல்.தெய்வீகக் காதலுக்கு அப்பால் ஒரு உணர்வுபூர்வமான கள்ளக் காதலையும் நாட்டார் பாடல்கள் விடவில்லை.

ஏரியின்னா ஏரிதாண்டி...
ஏரி நான் உலுக்கரண்டி-பெண்ணே
தாவி என்ன புடிச்சுகிடி

தாவி நல்லா புடிச்சேனே மாமா
கை வளையல் சேதமாகும்
என் புருசன் கேட்டு நின்னா-நான்
என்ன பதிலச் சொல்லுறது?

குனிஞ்சு சாணி அள்ளயிலே
வெறகு ராட்டி தட்டயிலே
தவறிட்டு உடைஞ்சுதின்னு
தந்திரமா சொல்லியழுதேன்!

காதலே தவறு என்கிறது சமூகம். ஆனால், இந்தக் காதலை இலக்கியங்களில் வரும் கதாகாதிரங்களினூடாக நாம் படித்துச் சுவைத்துக் கொண்டுதானிருக்கின்றோம். அதே நேரம் காதலிலும் கள்ளக் காதல் என்பது சமூகத்தின் வேண்டாத அல்லது செய்தற்கு ஒவ்வாத செயலாக இருந்தாலும் காதலுக்குக் கண் இல்லை தானே! அதனால் தானே இன்றும் பலர் தம் நிலை இழந்து போயிருக்கிறார்கள்?

நம் மக்களின் வாழ்க்கை ஒரு நீண்ட பயணம் கொண்டது. ஒரு காலத்தில் இந்தியாவில் தென்னகத்தில்காணப்பட்ட வறுமை! நமது வாழ்வியலையே முற்றிலும் மாற்றியமைத்தது. உழைப்பிற்காக நாம் அழைக்கப்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால், வாழ்வதற்காக நாம் வந்த பயணம்1 இன்றும் வரலாற்றுக் கறைகளாக! துயர்படிந்த அத்தியாயங்களாக! இருப்பது நம்மில் இளவட்டங்களுக்கு, ஏன் பல பெரியவர்களுக்கே தெரியாது. உலகம் போற்றும் திரைப்படமாக விளங்கிய 'டைட்டாணிக்' கப்பல் படம் நமக்கு ஒரு காவியம். அதுவும் உண்மைக் காவியம்!

ஆனால், நம் உறவுகளுக்கு ஒரு 'ஆதிலெட்சுமி' கப்பல் பயணம் யாருக்குத் தெரியும்! ஆயிரக் கணக்கான உயிர்களை கடலிலேயே காவு கொண்ட எமன! உழைப்பிற்காக மரணமான சரித்திரம்! எத்தனை உயிர்கள் இந்த மலையகத்தை நோக்கிப் பயணிக்கும் போதே நடுக் காடுகளில் மரணித்த அவலம். இந் அவலங்களையும் நாட்டார் பாடல்கள் சுவையாகத் தந்திருக்கின்றன.

நாட்டார் பாடல்களில் உறவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டதோ அதுபோல பக்திக்கும் அது நிறைவாகவே வழிசமைத்துள்ளது. மலையக மக்கள் வாழ்க்கையில் சிறு தெய்வ வழிபாடும் அவர்களது வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாக உள்ளதை நடைமுறை வாழ்க்கையில் காணலாம்.

நாகராஜ் நிசாந்தினி ;மாரியம்மன் தாலாட்டையும் கும்மியையும்; அறிமுகம் செய்யும்போது அதை அழகாக இவ்வாறு விழித்துப்போகின்றார். 'படைத்த மனிதனை பக்குவமாய்ப் பாதுகாக்க பாசத்தால் படைத்தான் தாயை....... வளர்ந்த மனிதனை வளமாய் ஆக்கிட வரவழைத்தான் தந்தையை ஆனாலும் கூட ஆண்டவனை மறக்க முடியாது: அவனால் படைக்கப்பட்ட எம்மைப் போன்ற ஜீவன்களுக்கு ........ ஒரு வாய்ப்பாக...' என இதனைக் குறிப்பிடுகின்றார்.

எழுதா இலக்கியம் என்பதாலோ இந் நாட்டார் பாடல்கள் ஒரு சமூக வழக்கைக் கொண்டிருந்தாலும் அவை பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபட்டுச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. பாடல் வரிகளிலும் கூட அவை மாறி மாறிச் செல்லும் பாங்கும் இருந்தாலும் அது எடுத்தாளப்பட்டுள்ள விதம் மிகவும் சிறப்பானதாய் இருக்கின்றது.

தாலாட்டுப் பாடல்கள் மலையகப் பிரதேசங்களில் முன்னுரிமை பெறுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை! ஏன் தெரியுமா? கணவன், மனைவி இருவருமே தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிகின்றவர்கள்! தேயிலைத் தோட்டங்கள் தான் அவர்களுக்கு வீடு! முருங்கை மரம் தான் நிழல்! வேப்ப மரம் தான் தொட்டில்! பசும் புற்றரைகள் தான் பஞ்சு மெத்தைகள்! கருங்கற் திட்டுகள் தான் குசன் நாற்காலிகள்!அருவிகளும் ஓடைகளும் தான் 'டிஸ்டிலரிஸ் வாட்டர்'.இயற்கையே வாழ்க்கை! இது தானே நம் மக்களின் வாழ்க்கைக் கூடாரம்?

இந்த மக்கள் தம் தொழிலைச் சிறப்பாகச் செய்தாலே உணவு? எனவே தொழிலைச் செய்ய தன் பிளளைகளை உறங்கவைத்துத் தானே ஆகவேண்டும்? இதில் கடல் கடந்து ராமேஸ்வரம் முதரம் மன்னார் வரையும் அத்துடன் ஒவ்வொரு காட்டையும் தேயிலைத் தோட்டங்களாக மாற்ற அவர்கள் ஆற்றிய பணிகள்? அப்பப்பா? மெச்சாதோர் மெச்சாமலே இருக்கட்டும். நாம் நம்மைப் பாராட்டிக் கொள்ளத்தானே வேண்டு;ம்!

இந்த வேலைகளுக்கு மத்தியில் கால் வயிற்றுக் கஞ்சியை பெற்றுக் கொள்ள உழைக்கும் போது பிள்ளைகள் அழுதால் வேலையைச் செய்யத்தான் முடியுமா?

இதோ தன் வேலையையும் செய்ய அதே நேரம் தன் பிள்ளையும் அயர்ந்து தூங்க தாலாட்டுப்பாடல் வருகிறது!அது இதமாய் மனங்களின் மனதை மட்டுமல்ல அந்தக் குழந்தையின் மனதையும் வருடி சுகமாய்த் துயில வைக்கிறது.

இவ்வாறு வாழ்வோடு இணைந்ததான இந்நாட்டார் பாடல்கள் இன்று அருகி வருவதைப் பார்க்கின்றோம். அது தன் உயிரோட்டத்தை இழந்து வருகின்றது. தமது இன்பம், துன்பம், கஷ;டம், நஷ;டம் போன்ற அனைத்து வகை வாழ்வின் வெளிப்பாடுகளையும் நாட்டுப் புற பாடல்களின் வாயிலாக விபரித்து வந்த மக்கள் இன்று அதனை மறந்து சினிமா, நாடகங்களின் பால் தமது கவனத்தை திருப்பி வருகின்றனர். இது சாதகமான விளைவு அன்று. தமக்கே உரிய ஓர் கலை அம்சத்தை விட்டு விட்டு, பிறிதொரு கலையம்சத்தின் பால் தமது கவனத்தை திருப்புவது மலையக சமூகத்தின் சுபிட்சமான எதிர்காலத்திற்கு கேடே.

உண்மையில் எமது கலை, கலாச்சாரத்தை நாமே மறந்து நடப்பது முறையன்று. எனவே வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் இந்நாட்டார் இலக்கியத்தை உயிரோட்டமுள்ளதாக மாற்ற நாம் அனைவரும் ஒருமித்து முன்வருவோம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக