ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

மலையக மக்களின் விடிவில் ஊடகங்களின் பங்கு


சமூக அமைப்பு என்பது என்றுமே நிலையானதாக (static) இருந்ததில்லை. அவ்வாறு இருப்பதும் சாத்தியமில்லை. எனவே மாற்றமேற்படும் போது அதற்கு ஏற்ப விழுமியங்களும் மாற்றங் காணலாம். இதனையே சமூக முன்னேற்றம் என்கின்றோம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இன்றைய யுகத்தில் மிகத் தெளிவாகத் தெரிவது விஞ்ஞான முன்னேற்றம் என்பதே. ஆனால் அவ்வாறு கண்ணுக்குப் புலப்படாத பல காரணங்கள் உள்ளன. அவை யாவும் அகக் காரணங்களால் ஏற்பட்டவை எனலாம். மெய்ப்பொருள் கண்டதால் எற்பட்டவை என்றும் கூறலாம்.

இத்தகைய மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் (process) ஊடகங்கள் பலத்த சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான் ஊடக தர்மம் என்ற வடிவில் போதிக்கப்படுவதும் கடைப்பிடிக்கப்படுவதுமாகும். மாற்றங்களை உள்வாங்காத சமூகம் காலப்போக்கில் உருக்குலைந்து விடுகின்றது. ஆக, எத்தகைய மாற்றங்கள் உள்வாங்கப்படுவதற்கான தகுதியுடையன என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பதிலும் அவர்களது கவனத்தை ஈர்ப்பதிலும் ஊடகங்களுக்கு தார்மீகக் கடமையுண்டு. இதற்கான விவாதக் களங்களை அவை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

ஊடகங்கள் யதார்த்த நிலையில் காலூன்றி நிற்க வேண்டும். அதே நேரத்தில் செல்நெறிக்கான திசையினைக் கோடுகாட்டவும் வேண்டும். ஆக்குதல், அழித்தல் என்ற குறுகிய அரசியல் வட்டத்துக்குள் நின்று நான் இதனைப் பார்க்க விரும்பவில்லை. ஆக்கமும் அழிப்பும் வேண்டுமானால் பக்கவிளைவுகளாக எற்படக்கூடும். ஆனால் அதுவே ஊடகங்களின் தலையாய பணி என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. ஆயினும் சில ஊடகங்கள் இதனையே இன்று தலையாய பணியாகத் தலைமேல் கொண்டு நிற்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

சமூக முன்னேற்றமென்பது எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகர மாகச் சமாளிப்பதற்குத் தன்னகத்தே போதியளவுக்கு விதிமுறைக ளையும் அவற்றை மதித்தொழுகும் மனப்பாங்குடனான மக்களையும் கொண்டிருக்கும் போதே சாத்தியமாகின்றது. சவால்கள் ஏற்படும்போது தடுமாறிப் பின்னோக்கி நகர நிர்ப்பந்திக்கப்படுமாயின் அதன் நாகரீகமும் முன்னேற்றமும் அற்ப ஆயுளுடன் முடிவுக்கு வந்துவிடும். இப்படி முடிந்;து போன சமூகங்களின் வரலாறுகள் நிறையவே உள்ளன.



இத்தகைய ஒரு நெருக்கடி ஏற்படும்போது சமூகத்தைப் பின்னோக்கி நகரவிடாது தடுப்பதற்கு ஊடகங்கள் ஆற்றிய பங்களிப்பின் காரணமாகவே வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் ஊடகங்கள் மிகப்பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொண்டன.

260 வருடகால ஊடகங்களின் தோற்றத்தை நீதிக்கான மானிடத்தின் மேற்சொன்ன தேடலுடன் தொடர்புறுத்திப் பார்க்கலாம். தத்துவாசிரியரும் அரசியலறிஞருமான Edmund Burke (1729-1797) என்பவரே பத்திரிகையை நான்காவது தூண் (Fourth Estate)என்று முதன்முதலில் வர்ணித்திருந்தார்.

ஜனநாயக ஆட்சிமுறைமைகளில் உலகின் பல பகுதிகளிலும் ஊடகங்கள் இன்றியமையாத ஓர் அங்கமாக மாறிவிட்டன. அத்துடன் அரசுகள் ஊடகங்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு நேர்மறையான விதத்தில் உதவிட வேண்டும் என்பதும் கட்டாயமாயிற்று. இன்றைக்கு, சுதந்திர  ஊடகத்துறை என்பது ஜனநாயக நாடொன்றில் விருப்பத் தெரிவின் படியான ஆடம்பரமாக அன்றி அத்தியாவசியமான மூலகம் ஒன்றாகவே மிளிர்கின்றது.
எந்த ஒரு நாட்டினதும் நாடித்துடிப்பினைக் காட்டக்கூடிய சாதனமாக ஊடகங்கள் காணப் படுவது எழுத்தரிவுள்ளோர் ஏற்றுக் கொண்ட உண்மையாகும் எமது நாட்டிலும் ஊடகங்கள் தனது முகத்தை காலத்திற்கு காலம் வேறு வேறு விதமாக காட்டியுள்ளமை வரலாற்றில் பதியப் பட்டுள்ளது.

தமிழ் தேசியவாதம் தலை தூக்கியிருந்த காலக் கட்டத்தில் தமிழ் ஊடகங்களில் எத்தனை எத்தனை ஊடகங்கள் நடு நிலைமையாய் இருந்தன என்பது மாத்திரம் இன்றி சிங்கள இன வாதத்தினை தூண்டும் ஊடகங்களுக்கு சரி சமமாக தமிழ் ஊடகங்களும் தமிழ் தேசியவாதத்திற்கு ஊதுகுழலாய் இருந்தமை மறைக்க முடியாத உண்மையாகும். இன்று யுத்தத்தின் கொடூரங்களைப்பற்றி புலம்பிக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகங்கள் நடந்து முடிந்த மனித படுகொலைகளுக்கும் பொருள் பன்பாட்டு கலாச்சார அழிவுகளுக்கும் தாங்களும் பங்கு தாரர்கள் என்பதனை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

ஊடகங்களும் ஊடக நிறுவனங்களும் அவரவர்களுக்கான தனிப்பட்ட நோக்கினையும் கொள்கையினையும் கொண்டிருந்தப் போதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஊடகவியலாளர்கள் தங்கள் சமூகத்தை நேசிக்கின்றனர் என்பதற்கான பல சான்றாதாரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றது.
மலையகம்

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஊடக நிருவனங்கள் தங்களின் அரசியலை எவ்வாறு அரங்கேற்றினர் என்பதற்கான பதில் இன்று பாராளுமன்றத்தில் இருக்கும் ஊடக முகங்கள் எமக்கு காட்டி நிற்கின்றன.இதில் தமிழ் மொழி சார்ந்தவர்கள் மலையகத்தினை ஊன்று கோளாய் ஊன்றியே நிமிர்ந்தவர்களாகும்.மலையகத்தின் ரொட்டியும் சம்பலும்; தேர்தல் பிரச்சாரத்தின் அடையாளமாய் ஆனதுடன் எங்களின் கிளிந்த ஆடைகள் அவர்கள் அணியும் கோட்டும் சூட்டும் ஆகியது.மாவின் விலை ஏற்றம் அவர்களின் வார்த்தைக்கு வண்ணம் ஊட்டியதே ஒழிய அவர்கள் சார்ந்திருக்கும் தலைமைகளுக்கு சிறிய தூண்டலைக்கூட கொடுக்க வில்லை.இதில் இன்னும் ஒரு வேடிக்கை யாதெனில் இந்த ஊடக வியாபாரிகளின் பின்னால் சில ஆசிரிய பெரு மக்களும் சுற்றி திரிந்தனர் ஏன் என்று வினவிய போது எவ்வாராவது குறிப்பிட்ட ஊடகத்தின் பிராந்திய செய்தியாளராகி விட வேண்டும் என்று கூறினர் வெட்கப் பட வேண்டிய நிலை ஏற்பட்டது மலையகத்தில் கற்றவர்கள் அனைவருக்கும்.

மலையக மக்கள் இன்னும் முகவரி இல்லாதவர்களாகவும் 80 வீதமானவர்கள் லயங்களிலே வாழ்பவர்களாகவும் இந்த நூற்றாண்டின் மனித வளர்ச்சியினை எட்டாதவர்களாகவும் வாழ்வதனைக் காணக்கூடியதாய் உள்ளது.

மலையக மக்கள் பற்றி கதைக்காதவர்கள் யாரும் இல்லை ஏமாற்றப்படுகின்றார்கள் ஏய்க்கப் படுகின்றார்கள் தேர்தல் காலத்தின் போது விற்கப்படுகின்றார்கள. இவை அனைத்துமே பலராலும் பல காலமாக கதையாடி வரும் விடயமாகும் எதிர் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சிகளின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேடைகளில் மலையக மக்களின் கண்ணீர் துடைக்க தங்களால் மாத்திரமே முடியும் என்று முழக்கம் இட்டு விட்டு தாங்கள் ஆட்சியை பிடிப்பதற்காக யாரோடு கூட்டு சேர வேண்டும் என்பதனை தீர்மானிப்பதன் மூலம் மீண்டும் மலையக மக்கள் மரக்கப்பட்ட மனிதர்களாகி விடுவார்கள்.இதற்கு சமாந்தரமாக ஊடகங்களும் ஊடகவயளாலர்களும் ஏமாற்றுபர்கள் அரச யந்திரத்துக்குள் பங்கு தாரர்களானதன் காரணத்தினால் மலையக மக்களை மறந்து விட்டு மலைரயக மக்களை நசுக்கும் பாதங்களின் பயணங்களைப் புகழத் துவங்கி விடுவார்கள் இந்த இடத்தில் சற்று நிதானித்து சிந்திக்கும் இடத்து இந்த ஊடக உலகம் குறைந்த பட்சம் ஒடுக்கும் இந்த கால்களை எதிர்க்கும் சிறு சிறு சக்திகளின் குரல்களைக் கூட இருட்டடிப்பு செய்வது அனுபவத்தால் பட்ட பாடங்களாகும். தேர்தல் காலங்களாக இருக்கட்டும் தொழிலாளர் தினங்களாக இருக்கட்டும் மலையக மக்களை நசுக்குபவர்களுக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம் மலையக மக்களை ஆண்டாண்டு கால அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்ய முயற்சிப்பவர்கள் ஊடகங்களால் ஈரட்டடிப்பிற்குள்ளாக்கப் பட்டு விடுவார்கள்.

அன்மைக் காலமாக மலையகப் பிரதேசத்தில் தொலைக்காட்சி கலாச்சாரம் மிகவும் சீரழிந்த கலாச்சாரமாக மாரி வருகின்றது.எமது நாட்டின் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒன்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை மாத்திரம் வழங்குவதாக பெருமைப்பட முடியாவிட்டாளும் குறைந்த பட்சம் நாட்டின் செய்திகளாவது நேரம் தவராமல் பார்க்க உதவுகின்றது ஆனால் அட்டன் கொட்டகலை நோர்வுட் பொகவந்தலாவை தலவாக்கலை மஸ்கெலியா பன்டாரவலை அப்புத்தலை காவத்தை என எங்கெல்லாம தமிழ் மக்கள் செரிந்து வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தமிழ் மக்களுக்கு இலங்கையில் பூகம்பம் வந்தாளும் தெறிவதில்லை கேபல் டீவி மூலமும் டிஸ் என்டனாக்கள் மூலமும் சினேகாவினதும்; பிரசன்னாவினதும் திரு மணத்தினை பார்த்து கூப்பாடு போட்டவண்ணம் இருக்கின்றார்கள். மலையகத்தின் மிக முக்கிய தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் இலங்கை செய்திகளை மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பார்க்காது இந்திய தொலைக்காட்சிகளை பார்ப்பதற்கு உதவிகளையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது பலரும் அறிந்த விடயமாகும் இதற்கு காரணம் அவ்வப்போது சில அரசியல்வாதிகளின் முகத்திரைகள் விரும்பியோ விரும்பாமளோ கழட்டப்படுவதாகும். கூரைகளில் பூட்டப்பட்டுள்ள டிஸ் என்டனாக்களை காட்டி மலையக மக்கள் முன்னேரி விட்டார்கள் என்று கூறும் அரசியல் வாதிகளின் கபடத்தனங்கள் ஊடகங்களின் மூலமே அரங்கேற்றப்படுகின்றது என்பது பொய்யானதல்ல. மலையகத்தில் பல தோட்டங்களில் மலம் கழிப்பதற்கு மலசல கூடம் இல்லாவிட்டாளும் கலாச்சார அசிங்கங்களைக் காட்டும் டிஸ் என்டனாக்கள் பொருத்தப் பட்டு இருப்பது வெட்கித் தலைக் குனிய வைக்கும் விடயமாகும்.

ஊடகங்கள் தொடர்பாக நோக்கும் போது உலக ஊடக வரலாற்றில் அதிகமானவை வியாபார நோக்கத்தினை மைய்யப் படுத்தியவையாகும். ஊடகங்களுக்க மனிதர்களை சரியானப் பாதையில் வழிநடத்த வேண்டிய தலையாய பொருப்பு காணப்படுகின்றது. ஊடகத்துரையில் கடமையாற்றும் பலருக்கு தங்களின் முகாமைத்துவத்திற்கு விசுவாசமாக வாழ வேண்டியது தொழில் பாதுகாப்பு காரணத்தால் கட்டாயமாகும் மலையக ஊடகவியலாளர்கள் வீடற்ற நாடற்ற தொழிலாளர்களின் இருப்பு தொடர்பாகவும் மாற்றம் தொடர்பாகவும் விடுதலைத் தொடர்பாகவும் பேச கடமைப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டப் பட வேண்டிய விடயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக