செவ்வாய், 22 அக்டோபர், 2013

பொதுநலவாய நாடுகளின் மாநாடு பற்றிய சர்ச்சை (இணைப்பு 01)



இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கான தினம் நெருங்கி வருகின்றதுடன் இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.


குறிப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க கனடாவின் முதலமைச்சரை அனுப்பாமல் இருக்கும் முடிவை கனடா எடுத்துள்ளமை பெரும் அமளியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கனேடிய  பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்காணும் விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது:


“ 2013 ஆண்டில் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்ட போது, அந்நாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக நிலவி வந்த மோசமான நிலையை சீர் செய்வதற்கும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், பொறுப்புக் கூறல் செயற்பாட்டில் முன்னேற்றம் அடைவதற்கும் இதை ஒரு வாய்ப்பாக இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என கனடா எதிர்பார்த்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அது அவ்வாறு நடைபெறவில்லை.


யுத்த சமயத்தின் போதும், அதன் பின்பும் மோசமான விதத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டும் சர்வதேசம் ஏற்றுள்ள மானுட விழுமியங்கள் மற்றும் பொறுப்புக் கூறலை புறக்கணித்தும் வரும் இலங்கையின் போக்கை கனடாவால் ஏற்க முடியாது.
 

மேலும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் பிரதம நீதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியமையையும் கனடாவால் ஏற்க முடியவில்லை. அத்துடன் அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தல், அவர்களை கைது செய்தல், சிறுபான்மை இனத்தவரை துன்புறுத்தல், காணாமால் போதல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் கொலைகள் போன்றவையும் கனடாவை கவலை கொள்ளச் செய்துள்ளது.
 

இவைகள் மூலம் பொதுநலவாய நாடுகளின் அடிப்படையான பெருமானங்களை நிலை நிறுத்தும் விடயத்தில் இலங்கை தோல்வியையே சந்தித்துள்ளமை தெளிவாகின்றது. இவைகளின் அடிப்படையில் இலங்கையில் கொழும்பு நகரத்தில் நடைபெறவுள்ள 2013 ஆண்டு பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கனடாவின் பிரதமர் என்ற கோதாவில் பங்கேற்கபதை நான் தவிர்த்துக் கொள்கின்றேன்.
 

கனடாவின் இந்த நிலைப்பாடு இலங்கை அரசை அதிருப்திக் கொள்ளச் செய்துள்ளதுடன் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை அரசியல் மயப்படுத்துவதற்கான ஒரு எத்தணிப்புஎன இதை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சாடியுள்ளார்.


இத்தருணத்தில் இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக சிந்தித்தபடி கனடாவை சாடுவதை விடுத்து கனடாவின் இந்த முடிவில் பொதிந்துள்ள யுதார்த்தமான விடயத்தின் பக்கம் தன்னுடைய கவனத்தை செலுத்துவது பயன் தரும்.
 

இலங்கையர் என்ற அடிப்படையில் நம்முடைய மனோபாவம் நமது நாட்டில் நடாத்தப்படும் இது போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை யார் பகிஷ்கரிக்கின்றார்கள்? யார் பகிஷ்கரிக்கவில்லை? என்பதாக இருக்கக் கூடாது. மாறாக, இது போன்றதொரு புறக்கணிப்பை பற்றி ஏனையோர் சிந்திக்கும் விதத்தில் நம் நாட்டின் மனித உரிமைகளின் நிலை இருப்பதை பற்றியே நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியுள்ளது.


கனடாவின் இந்த முடிவு பற்றிய விமர்சனங்களை செய்து கொண்டிருப்பதற்கே இலங்கை அரசு திட்டம் இடுமெனில், அதற்கு முன் நம் நாட்டின் மனித உரிமைகள் உள்ள மோசமான நிலையை பற்றி அக்கறை கொள்ளும் ஒரே நாடு கனடா மட்டும் அல்லவென்ற உண்மையை நம் அரசு முதற்கன் உணர வேண்டும்.
 

மேற்படி மாநாட்டில் பங்கேற்பதற்கு பிரிட்டன் முடிவு செய்துள்ள போதிலும், அது மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்தொரு முடிவு என்பதை அரசு புறிந்து கொள்ள வேண்டும். 2011 ஆண்டு நத்தார் தினத்தில் இலங்கையில் மர்மான விதத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரிட்டிஷ் பிரஜை ஒருவரான குராம் சேக்கின் கொலை தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையை சுட்டிக்காட்டி மாநாட்டை பிரிட்டன் பகிஷ்கரிக்க வேண்டும் என எலிஸபெத் இராணியார் பலமாக வழியுறுத்தப்பட்டு வருகின்றார்.
 

இதே வேளை, இலங்கை விடயத்தில் ஒரு வித கோழைத்தனமான, நிலையற்ற போக்கையே பிரிட்டன் கடைபிடிப்பதாக பிரிட்டனின் பாராளுமன்றக் குழுவொன்று குற்றம் சாட்டியுள்ளது.


பொதுநலவாய நாடுகள் மாநாட்டை நடாத்துவதற்கு முன், அந்நாட்டில் உள்ள மனித உரிமை தொடர்பான நிலைகளை சீர்செய்வதை ஒரு நிபந்தனையாக இலங்கை அரசிட்டு இட்டிருக்க வேண்டும் எனவும், இலங்கையில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களின் அடிப்படையில் பிரிட்டன் இதை விட சிறந்த, கொள்கைப் பிடிப்பு மிக்கதொரு தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும் எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
 

இதே வேளை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பிரிட்டன் பங்கேற்பதை இலங்கையின் தற்போதையை நடவடிக்கைகளை பிரிட்டன் அங்கீகரிப்பதாகக் இலங்கை பொருள் செய்யக் கொள்ளக் கூடாது என பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
 

மனித உரிமை விடயங்கள், சட்டத்தின் ஆளுகை, நீதித்துறையின் சுயாதீனம் போன்ற விடயங்கள் தொடர்பான இலங்கை அரசின் போக்கு பற்றி தான் கவலை கொள்வதாக இலங்கைக்கான பிரிட்டனின் உயர் ஸ்தானிகர் ஜோன் ரங்கின் சில வாரங்களுக்கு முன் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.
 

அத்துடன் இம்முறை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு தனது நாடு முடிவு செய்ததற்கான காரணம் அது உலகில் எங்கு நடைபெறுகின்றது என்பதை விட பொதுநலவாய கட்டமைப்பின் அந்த நிகழ்விட்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் நிலைப்பாடேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

மேலும் இந்த மாநாடு காரணமாக மாநாட்டின் போதும் அதன் பிறகும் இலங்கை மீது விழும் சர்வதேச பார்வையானது, பொதுநலவாய நாடுகளின் முக்கியமானதொரு அம்சமான நல்லாட்சியை இலங்கை செயல் வடிவத்தில் காட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கைக்கு ஏற்படுத்துவதற்கான ஒரு காரணியாக அமையும் என்றும், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு ஆகியவை தொடர்பாக காத்திரமான முன்னேடுப்புக்களை இனியாவது இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்ற செய்தியுடனேயே பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரன் இம்மாநாட்டில் பங்கேற்க வருகின்றார் என்றும் ரென்கின் குறிப்பிட்டுள்ளார்.  


இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்ற விடயம் இந்தியாவிற்கும் ஒரு பெரும் பிரச்சினையாகவே இந்த நிமிடம் வரை இருந்து வருகின்றது. மனித உரிமைகள தொடர்பாக இலங்கையின் போக்கை கண்டிக்கும் விதத்தில் மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற உள்நாட்டு அழுத்தம் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது.


இறுதியாக கிடைத்த செய்திப் படி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்றே தெரிகின்றது.
 

உலகின் முக்கிய பல நாடுகளில் ஏற்பட்டு வரும் இந்த குழப்பமான சூழலை அவதானிக்கும் போது இலங்கையின் மனித உரிமை மீறல்கள் உட்பட்ட ஏனைய விடயங்களாவன பொதுநலவாய நாடுகள் மாநாடுடன் மட்டும் தொடர்பான அல்லது அதனுடன் முடிந்து போகும் ஒரு பிரச்சினை அல்ல என்பது தெளிவாகின்றது.
 

சில வாரங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு பிரகடனத்தில், 2014 மார்ச் மாதத்திற்கு முன் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை ஆகிய விடயங்களில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னெற்றத்தை அடையாத பட்சத்தில் சர்வதேச விசாரணை ஒன்றை சந்திக்க இலங்கை அரசு தயாராக வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

இப்பிரகடனமானது, ஐநா சபை இலங்கைக்கு எதிராக இரு தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றை இலங்கை பொருட்படுத்தாமல் அசட்டையாக இருக்கும் பின்னணியிலேயே விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் போது ஐநா சபை புதிதாக எதையும் இலங்கைக்கு கூறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுமுன் வைத்த பரிந்துறைகளை செயற்படுத்துமாறே ஐநா இலங்கை அரசை வழியுறுத்தியது.
 

ஒரு நாடு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்தளவு உள்நாட்டு வெளிநாட்டு விமர்சனங்களுக்கு இலக்காகி இருக்கும் போதே பொதுநலவாய நாடுகள் மாநாடு போன்றதொரு முக்கிய நிகழ்விற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு அதற்கு வழங்கப்பட்டிருக்கும் அசாதாரண நிலை பற்றி உலக நாடுகள் பொதுவாக துனுக்குற்றளதோடு மிகுந்த அவதானிப்புடனேயே அதனை கண்காணித்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக