வியாழன், 31 அக்டோபர், 2013

ஆலய உடைப்புக்கெதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்!

கடந்த ஞாயிறு நடுநிசியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது யாழ்ப்பாணம்-கண்டி A9  வீதியில் அமைந்திருந்த மகா பத்ரகாளி அம்மன் ஆலயம்.  பெரும் இயந்திரங்களைக் கொண்டு இந்த ஆலயம் நிர்மூலம் செய்யப்பட்டிருக்கிறது.


ஓர் இனத்தின் மத தாற்பரியத்தின் மீது புல்டோசர்கள் பேயாட்டம் ஆடியிருக்கின்றன. ஒரு சமூகத்தின் இரத்த நாள-நாடிகளுடன் இரண்டறக் கலந்த நம்பிக்கைகளின் மீது அராஜகம் மீண்டும் தனது கோரத்தைப் பதிவு செய்திருக்கிறது.
 
 
ஒவ்வொருவருக்கும் அவரவர் மதங்களும் வழிபாட்டுத் தளங்களும் . சமயம் சார்ந்த நம்பிக்கைகளும் புனிதமானவை; உயர்ந்தவை. அவற்றை மதித்து வாழ்வது மனித பண்பாடாகும். அதுமட்டுமன்றி,  மாற்று மதங்களை இழித்துரைப்பதே குற்றமென்றிருக்கையில் அவற்றை அழித்தொழிப்பதென்பது அநியாயமும் அநாகரீகமும் ஆகும். ஆனால், இவ்வாறான அக்கிரமங்கள் அண்மைக் காலங்களாக இலங்கையில் அதிகரித்தே வருகின்றன.
 
 
தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இஸ்லாமிய மக்களின் பள்ளிவாசல்களின் மீதான தாக்குதல்களோடு சம்பந்தப்பட்டோர் திருப்தியடைந்து விடவில்லை. தேவாலயங்கள், கோவில்கள் மீதான தாக்குதல்களையும் அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது தம்புள்ள அம்மன் ஆலயம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதி முடிப்பதற்குள் இன்னொரு கோயிலோ, பள்ளிவாசலோ, தேவாலயமோ     தாக்குதலுக்குள்ளாகியிருக்காது என்பதற்கு எவ்வித  உத்தரவாதங்களும் இல்லை.
 
 
தம்புள்ள ஆலயம் நிர்மூலமாக்கப்பட்ட விடயம் அடுத்த ஒரு விடயத்தைச் சொல்லாமல் சொல்கிறது. அதனைப் பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு அது நன்கு தெரியும்.
 
 
அம்மன் ஆலய அழிப்புக்கெதிராக அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். பள்ளிவாசல்கள் உடைப்புகளுக்கெதிராக தமிழ்த் தலைவர்களும் முற்போக்கு அரசியல்வாதிகளும் மற்றும் நேர்மையும் மனிதமும் நிறைந்த தமிழ்-சிங்கள மக்களும் கண்டனக் குரலெழுப்பியதைப் போல, இந்த விடயத்திலும் முஸ்லிம் அரசியற் தலைமைகளும் புத்திஜீவிகளும் பொதுமக்களும் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் உரத்த தொனியில் பதிவு செய்ய வேண்டும்.
 
 
அரசியல் ரீதியாகத் தமக்குள்ளிருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது இன்றைய சூழலில் மிக இன்றியமையாதது. ஐக்கியப்பட்ட மக்களின் எதிர்ப்பலைகளானது உடனடியாக இல்லாவிட்டாலும் காலவோட்டத்தில் அதிசயிக்கத்தக்க நன்மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும்.

திங்கள், 28 அக்டோபர், 2013

தமிழ்-முஸ்லிம் உறவுப் பூங்காவனத்தை பூத்துக் குழுங்கச் செய்வோம் வாரீர்.......


கால் நூற்றாண்டுக்கு முன்னம், எப்போதுமில்லாத அளவுக்கு வீசத் தொடங்கிய சந்தேகப் புயலில் அந்த அழகிய-நறுமணம் வீசிக் கொண்டிருந்த பூந்தோட்டம் அழியத் தொடங்கியது. வண்ணமும் வாசமுமாய் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்து பூத்த மலர்கள் தத்தம் இதழ்களைக் களைந்து மொட்டைக் கிளைகளோடு வாடி நின்றன. நல்லெண்ணம்-புரிந்துணர்வு-சினேகம்-பரஸ்பர உதவிகள் என்று பூந்தோட்டத்தில் பாட்டுப் பாடிப் பறந்து திரிந்த ஒற்றுமைப் பட்டாம் பூச்சிகள், வீசத் தொடங்கிய சூறாவளிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கண் காணாத இடம் நோக்கிப் பறந்து போயின.

  
இப்போது 30 வயதுக்குட்பட்டோரில் பெரும்பாலானோர்க்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் மக்களுக்கு முஸ்லிம்கள் விரோதிகள் என்பதும் முஸ்லிம்களுக்குத் தமிழர்கள் எதிரிகள் என்பதும்தான். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மட்டுமல்லாது, சுயநல தமிழ்-முஸ்லிம் அரசியல் வியாபார நிறுவனங்களும் இந்த நிலைமையைத் தோற்றுவிப்பதற்கான தமது எத்தனங்களில் பாரிய வெற்றியைக் கண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
 

வெவ்வேறான மத நம்பிக்கைகளுடனும் பாரம்பரியங்களுடனும் கலாசாரங்களுடனும் வாழ்ந்தாலும், மொழி என்ற வட்டத்துக்குள் ஒன்றிணைந்து ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ்-முஸ்லிம் மக்களின் போற்றத்தக்க ஐக்கியத்தில் மண்ணை அள்ளிப் போட்ட கொடுமை திடீரென நிகழ்ந்ததல்ல. அது பல்வேறு சூழ்ச்சிக் குழுக்களினால் மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றி முடிக்கப்பட்ட கபட நாடகமாகும்.
 

இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில் செறிவாக வாழ்ந்த தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான நேசப் பிணைப்புகளை இரை மீட்டிப் பார்க்கையில் இதயம் நொந்து அழுவதைத் தவிர்க்க முடியாமல் உள்ளது.
 

அங்குள்ள பாடசாலைகளில் இணைந்து கல்வி கற்று, மைதானங்களில் விளையாடி, குளங்களில் நீராடி, வாகனங்களில் பயணித்து, விழாக்களில் குதூகலித்து, பண்டிகைகளில் பரஸ்பரம் பட்சணங்கள் பகிர்ந்தளித்து, பெருநாள்-திருநாட்களில் வாழ்த்துச் சொல்லி,சுப காரியங்களில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களையும் சோக நிகழ்வுகளில் பங்குபற்றி ஆறுதலையும் வழங்கி வாழ்ந்த அந்த வசந்த காலங்களை எண்ணுகையில் நெஞ்சத்தில் ஏக்கப் பெருமூச்சுக்கள் இடையறாது எழுகிறது.
 

எந்தக் கொள்ளிக் கண் பட்டதோ, தமிழீழ விடுதலைக்கென்று தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் பின்னர் வட-கிழக்குத் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைப் பூங்காவை நோக்கிப் புயலடிக்க ஆரம்பித்து விட்டது. மொழியின் ஐக்கியம் தாண்டி, மதத்தின் மேலான ஐயப் பார்வை உக்கிரமடையத் தொடங்கிற்று.
 

அன்பால் கட்டுண்டு கிடந்தவர்களை ஆயுதங்கள் வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்தன. காட்டிக் கொடுத்தல்களும் கழுத்தறுப்புகளும் மும்முரமாகின. பாவமும் பழியும்-பழிக்குப் பழியுமென தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையெனும் மலர்க் காடு, மயானக் காடாய்ப் பாழ்பட்டது.
 

யார் ஆரம்பித்தது...யார் முடித்து வைத்தது..? யார் அதிகமாகக் குற்றமிழைத்தது...யார் குறைவாகக் குற்றம் புரிந்தது...? என்பது போன்ற வினாக்களுக்கான விடை தேடல்களில் இறங்குவதானது, இனி என்றைக்குமே தமிழ்-முஸ்லிம் உறவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்குத் தடையாகவே இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.
 

கணக்கிட்டுப் பார்க்கப் போனால், இரு தரப்பிலும் கொடுஞ் செயல்கள் புரிந்தவர்கள் சில ஆயிரக் கணக்கானோர்தான். ஆனால், அந்தக் கொடுஞ் செயல்களை வெறுத்தோர்-வெறுப்போர் பல இலட்சக் கணக்கானோர் என்ற உண்மை தெளிவாகும்.
 

வன்செயல்களினால் பாதிக்கப்பட்டோரும் அவரைச் சார்ந்தோரும் உணர்ச்சிகளின் உந்துதலுக்காற்பட்டு, அவ்வப்போது எதிர்த் தரப்பாரை நொந்து கொள்வது வெகு இயற்கையானதே. ஆயினும், இறந்த காலங்களில் நடந்து முடிந்து விட்டவற்றை இல்லாமற் செய்துவிட முடியாதெனும் யதார்த்தத்தை உணர்ந்து, தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு வாழ முற்படுவதே விவேகமாகும்.
 

விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை,பரஸ்பர நம்பிக்கை,புரிந்துணர்வு,மதங்கள் கடந்து மனிதம் சார்ந்த அணுகுமுறைகள் என்பவற்றால் பிரிந்து நிற்கும் சமூகங்கள் மீண்டும் பிணைக்கப்பட வேண்டும்!!
 

தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறுதியான ஐக்கியத்தை உருவாக்கும் பாரிய பணியில் இரு தரப்பிலுமுள்ள ஆர்வலர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் தம்மை அர்ப்பணித்துக் கடமையாற்றின், வெகு விரைவிலேயே வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கும் வாசமிக்க தமிழ்-முஸ்லிம் உறவுப் பூங்காவனத்தைப் புனர் நிர்மாணம் செய்து விடலாம்.


வாழைப்பழத்தை தோளோட சாப்புடுங்க பிலீஸ்....!


ஒரு படத்தில் நம் செந்தில் வாழைப்பழத்தை கீழே போட்டு விட்டு தோலில் தான் சத்து உள்ளது என சொல்லி தோலை உண்ணுவார். அருகில் உள்ளவர்கள் அவரை பார்த்து சிரிப்பார்கள். நாமும் சிரித்திருப்போம்.


ஆனால் உண்மையிலேயே வாழைப்பழத் தோலில் வியக்கத்தக்க பல நன்மைகள் அடங்கியுள்ளது. என்ன நண்பர்களே, கேட்பதற்கு புதிராக உள்ளதா? ஆனால் உண்மை அது தான். 


வாழைப்பழம் என்பது நம் நாட்டில் சீரழியும் ஒரு பழவகை. அதனால் தான் என்னவோ, அதன் மகத்துவத்தை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. வாழைப்பழத் தோலை குப்பையில் போடும் முன், இந்த கட்டுரையை படித்து வாழைப்பழத் தோலில் உள்ள நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 


ஏனெனில் அது வியக்கத்தக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்களும்,கார்போஹைட்ரேட்டும் வளமையாக உள்ளது. மேலும் அதில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது.


வாழைப்பழத்தின் தோல் கருமையடையும் போது, பழத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சரி,இப்போது இயற்கையின் இந்த அரிய அன்பளிப்பு உங்களுக்கு அளிக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாமா...



பளபளக்கும் பற்கள்

வாழைப்பழத் தோலைக் கொண்டு தினமும் பற்களில் ஒரு நிமிடத்திற்கு தேய்க்கவும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். இது பற்களை பளிச்சிட வைக்கும். இதற்கு சிகிச்சை எல்லாம் மேற்கொண்டால்,அதற்கான செலவை பற்றி யோசித்துப் பாருங்கள்.



மரு  
 
மருக்களை நீக்கவும், புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்கவும் வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். வாழைப்பழத் தோலை சருமத்திற்கு பயன்படுத்த எளிமையான வழியாக இது விளங்குகிறது.



சமையல்  

வாழைப்பழத் தோலை உண்ணலாம். அதிலும் அதனை கொண்டு அருமையான இந்திய உணவுகளை தயார் செய்யலாம். குறிப்பாக கோழிக்கறியை அதன் மீது வைத்து, அதனை மென்மையாக்கவும் இதை பயன்படுத்தலாம்.



பருக்கள்  

வாழைப்பழத் தோலைக் கொண்டு முகம் மற்றும் உடலில் தினமும் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அது பருக்களை குணப்படுத்தும். அதுவும் ஒரு வாரத்திலேயே பலனை அனுபவிப்பீர்கள். மேலும் பருக்கள் நீங்கும் வரை இதனை தொடரவும்.



சுருக்கம்  

வாழைப்பழத் தோல் சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க வைக்கும். அதற்கு மசித்த வாழைப்பழத் தோலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீரில் முகத்தை கழுவவும்.



வலி நிவாரணி  

வாழைப்பழத் தோலை உடலில் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக தடவும். வலி போகும் வரை ஒரு 30 நிமிடத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். அதனுடன் சேர்த்து காய்கறி எண்ணெயையும் கலந்து கொண்டால்,இன்னும் சிறப்பாக செயல்படும்.



சிரங்கு  

சிரங்கு போன்ற சரும அழற்சி ஏற்பட்ட இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்க்கவும். ஏனெனில் இதில் ஈர்ப்பத குணமும், அரிப்பை நீக்கும் குணமும் உள்ளது. அதனால் இவ்வகை அழற்சியை வேகமாக குணப்படுத்தி,நல்ல முன்னேற்றத்தை விரைவிலேயே காண்பீர்கள்.



பூச்சிக் கடிகளுக்கு மருந்து  

கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணி கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.



ஷூ, லெதர் மற்றும் சில்வர் பாலிஷ்  

ஷூ, லெதர் மற்றும் சில்வர்களில் வாழைப்பழத் தோலை தேய்த்தால், அவைகளை பளபளக்கச் செய்யும்.



புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு  

வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு அதை கண்களில் தடவும் முன் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும். மேலும் இது கண்ணில் புரை ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

பொதுநலவாய நாடுகளின் மாநாடு பற்றிய சர்ச்சை (இணைப்பு 02)



இலங்கைக்கு இந்த வாய்ப்பை வழங்க வேண்டாம் என பொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தே வருகின்றது.



இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் பணிப்பாளர் ப்ரேட் எடம்ஸ் பாரிய போர் குற்றச்சாட்டுக்கள் தொடுக்கப்பட்டுள்ள ஒரு நாட்டிற்கு பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளமை பெரும் முறைகேடான ஒரு நடவடிக்கைய மட்டுமன்றி ஜனநாயக கோட்பாடுகளை மதிக்காத. தன்னுடைய குற்றச் செயல்களுக்கு மனம் வருந்தாத ஒரு அரசிட்கு இந்த வாய்ப்பை அளித்திருப்பது நயவஞ்சகத்தின் உச்சமாகும் என்று சாடியுள்ளார்.
 

மாநாட்டை யார் பகிஷ்கரிப்பார்கள் அல்லது பங்கேற்பார்கள் என்பது இலங்கையரான நமக்கு ஒரு பெரும் பிரச்சினை அல்ல. அது தொடர்பான தீர்மானங்கள் அந்தந்த நாடுகளின் உரிமையாவதோடு அதை நாம் மதிக்க வேண்டும்.
 

பிரிட்டனின் கூற்றுப்படி தான் இம்மாநாட்டில் பங்கேற்பதை இலங்கையின் செயற்பாடுகளுக்கான அங்கீகாரமாக இலங்கை அரசு கொள்ளக் கூடாது என்பது தெளிவாகின்றது.
 

மேலும் பிரிட்டன் இதில் பங்கேற்பதன் மூலம் வேறு சில விடயங்களை இலக்கு வைத்திருக்கவும் இடமுண்டு. அதாவது மாநாட்டை பகிஷ்கரிக்காமல் அதில் பங்கேற்று, அந்த பங்கேற்பின் உரிமைஊடாக மனித உரிமை மற்றும் ஏனைய விடயங்களுக்காக அதிக அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்க பிரிட்டன் எண்ணியிருக்கலாம்.
 

இதே வேளை, இலங்கையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மாநாட்டை புறக்கனிக்கும் கனடாவின் முடிவும் போற்றத்தக்கதே. கனடாவின் இந்த நடவடிக்கையை இலங்கைக்கு எதிராக அந்நாடு மேற்கொள்ளும் ஒரு அரசியல் தாக்குதலாக இலங்கை அர்த்தம் செய்வது விவேகமாகாது.
 

கனடாவின் இந்த நடவடிக்கையானது, அந்நாடு உலகில் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக மேற்கொண்டு வரும் பல்வேறு பட்ட நடவடிக்கைகளின் ஒரு அங்கம் மாத்திரமே. கனடாவின் இது போன்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் என்றும் போற்றியும் பாராட்டியும் வந்துள்ளமை யாவரும் அறிந்ததே.
 

உலகில் மனித உரிமையை நிலைநாட்டும் விடயத்தில் கனடாவின் பங்களிப்பு மிகவும் பிரசித்தம் பெற்றதாகும். ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவாக இன்று செயற்பட்டு வரும் சர்வதேச சமாதானப் படைகனடாவின் ஒரு முன்மொழிதலேயாகும்.
 

அதே போன்று கருப்பர்களுக்கு வேற்றுமை காட்டும் தென்னாபிரிக்காவின் போக்கை கண்டித்து 1980 ஆண்டில் அந்நாட்டிட்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்ற யோசனையும் கனடாவே ஐநா சபையில் முன்வைத்தது.
 

மேலும் 1996 ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பர்மாவிற்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை கொண்டு வரும் விடயத்திலும் கனடாவே முன்னின்று செயற்பட்டது. அதைத் தொடர்ந்து 2007 ஆண்டில் பெலாரஸ்ஸில் பாரிய மனித உரிமை மீறல்கள் நடபெற்ற போதும், சிரிய அரசு தன்னுடைய சொந்த மக்களுக்கு எதிராகவே கொடுமைகளை கட்டவிழ்த்த பேதும, ஈரானின் கடந்த பத்தாண்டு கால தெளிவற்ற மனித உரிமை கோட்பாடுகளின் போதும் அந்நாடுகளுக்கு எதிராக ஐநாவை நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிக்கும் விடயத்தில் கனடாவே முன்னின்றது.
 

அது மட்டுமின்றி சர்வதேச குற்றச் செயல் நீதிமன்றக் கோட்பாட்டையும் கனடாவே முன் மொழிந்ததோடு அது ஸ்தாபிக்கப்பட்டதன் பின் அதன் முதல் தலைவராக சில காலம் பணியாற்றிய நீதியரசர் பிலிபே கர்ஷும் ஒரு கனேடியரே ஆவார்.
 

இந்தளவு சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ள கனடா போன்றதொரு ஒப்பற்ற தேசம் நம் நாட்டில் நடைபெற விருக்கும் ஒரு சர்வதேச வைபவத்தில் பங்கேற்க மறுத்துள்ளமையைதான் நம்முடைய வெளிளாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அது பொருட்படுத்த வேண்டிய விடயமே அல்லஎன்று ஒதுக்கித் தள்ளியுள்ளார்.
 

உண்மையில் இது ஒரு விவேகமான, செல்லுபடியாகக் கூடிய ஒரு நிலைப்பாடு அல்ல.  மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாக கனடாவின் அர்ப்பணிப்புகளை இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உட்பட்ட பல உலக நாடுகள் வானளவு மெச்சும் போது மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கள் கனடாவை பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு முன் இரு முறை சிந்தித்துப் பார்த்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது.
 

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பான விடயம் இவ்வாறு சர்ச்சைக்குரியதாக இருக்கும் நிலையில் தென்னாபிரிக்கக் குடியரசும் இது பற்றி நன்றாக சிந்தித்து ஒரு முடிவை எடுப்பதே பொருத்தமாகும்.
 

தன்னுடைய நாட்டு மக்களில் ஒரு சாராருக்கு அநீதிகளை இழைத்த வண்ணம் தென்னாபிரிக்கா அழிவின் பாதையில் நடை போட்டுக் கொண்டிருந்த போது உரிய தருணத்தில் ஐக்கிய நாடுகள் சபை பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்ததன் பயனாக தென்னாபிரிக்கா சுதாரித்துக் கொண்டு தன்னை திருத்திக் கொண்டது. அதன் வெளிப்பாடாக இன்ற அந்நாடு நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சகவாழ்வு, அபிவிருத்தி போன்ற அம்சங்களில் ஒரு சிறந்த முன்மாதிரியாக உலகில் திகழ்கின்து.
 

நிலைமை அவ்வாறிருக்க தன்னுடைய கடந்த காலத்தை மறந்து விட்டது போல தென்னாபிரிக்கா நடந்து கொள்ளாமல் தன்னுடைய கந்த காலத்துடன் இலங்கையின் நிகழ்காலத்தை ஒப்பிட்ட வண்ணம், பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக நல்லதொரு முடிவை அந்நாடு எடுக்க வேண்டும்.


இதே வேளை, இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேசம் குறை கூறும் போதெல்லாம், குறுகிய அரசியல் இலாபம் கறுதி அதை வெளிநாட்டு சதி, அது, இது என்றெல்லாம் கூறியபடி அதற்கு அரசியல் முலாம் பூசுவதற்கு முயற்சிப்பதை நம் அரசம் இனியேனும் விட்டு விட வேண்டும்.
 

நம் நாட்டிற்கு எதிரான கடந்த கால ஐநா தீர்மானங்கள் முதல், தற்போதைய பொதுநலவாய மாநாடு தொடர்பாக இன்று ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலை வரை பல்வேறுபட்ட விதங்களில் இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வந்தாலும் அவை அனைத்திலும் பொதிந்துள்ள செய்தி ஒன்றேயாகும்.
 

மேலும் இந்த அழுத்தங்களின் தீவிரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் நம் அரசு உணர வேண்டும்.
 

காதுகளில் விரல்களை வைப்பதனால் கோஷங்கள் குறைந்து விடும், மறைந்து விடும் என எண்ணுவது விவேகமாகாது. மாறாக, அதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வுகளை காண்பதன் மூலமே கோஷங்களையும் எதிர்ப்புக்களையும் வெற்றி கொள்ள முடியும்.